Sunday, June 10, 2018

பி.இ. கலந்தாய்வு சான்றிதழ் சரிபார்ப்பு: உதவி மையத்துக்கு விண்ணப்பதாரர்கள் அனைத்து நாள்களிலும் வரலாம்

Image result for anna university

பி.இ. ஆன்-லைன் கலந்தாய்வு விண்ணப்பதாரர்கள், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்காக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்துக்கு எந்த நாளிலும் வரலாம் என அண்ணா பல்கலைக்கழகம் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக, கடைசி நாளான ஜூன் 14 -ஆம் தேதி வரை மாணவர்கள் காத்திருக்கத் தேவையில்லை எனவும், அண்ணா பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் தெரிவித்தனர். அண்ணா பல்கலைக்கழகம் ஜூலை 6 - ஆம் தேதி தொடங்க உள்ள பி.இ ஆன்-லைன் கலந்தாய்வுக்கு, மே 3 -ஆம் தேதி முதல் ஜூன் 2 -ஆம் தேதி வரை ஆன்-லைன் விண்ணப்பப் பதிவு நடைபெற்றது.

விண்ணப்பித்தவர்களுக்கான அசல் சான்றிதழ் சரிபார்ப்பு, தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 42 கலந்தாய்வு உதவி மையங்களில் கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கியது. இந்த சான்றிதழ் சரிபார்ப்பு ஜூன் 14 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. சென்னை மையத்தில் மட்டும் ஜூன் 17 -ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்பதற்கான தேதி, நேரம், டோக்கன் எண் உள்ளிட்ட விவரங்கள் மாணவர்கள் பதிவு செய்த செல்லிடப்பேசி எண்ணிக்கும், மின்னஞ்சல் முகவரிக்கும் பல்கலைக்கழகம் அனுப்பியது.

இந்த சான்றிதழ் சரிபார்ப்பில் குறிப்பிட்ட நாளில் மாணவர் பங்கேற்க இயலாமல் போனால், மாணவரின் பெற்றோர் பங்கேற்கலாம். அவ்வாறு வரும் பெற்றோர், மாணவரின் புகைப்படத்துடன்கூடிய அத்தாட்சிக் கடிதம், அனைத்து அசல் சான்றிதழ்களையும் எடுத்து வரவேண்டும் எனத் பல்கலைக்கழகம் அறிவித்தது. மேலும், கடைசி நாள் வரை பங்கேற்க இயலாத மாணவர்கள், ஊட்டி உதவி மையம் தவிர பிற உதவி மையங்களில் ஜூன் 14 -ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பங்கேற்கலாம். இந்த இரண்டாவது வாய்ப்பையும் பயன்படுத்த முடியாத மாணவர்கள், சென்னை மையதத்தில் ஜூன் 17 -ஆம் தேதி மதியம் 1 மணிக்கு பங்கேற்கலாம் எனவும் பல்கலைக்கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டது.

எந்த நாளிலும் பங்கேற்கலாம்: 

இந்த நிலையில், அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு கடைசி நாளுக்கு முன்பாக எந்த நாளிலும் மாணவர்கள் பங்கேற்கலாம் என அண்ணா பல்கலைக்கழகம் இப்போது அறிவித்துள்ளது. கடைசி நேர நெரிசலைக் குறைக்கவே இந்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் கூறினார்.

இதுகுறித்த அறிவிப்பு: 

அசல் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு குறிப்பிட்ட நேரத்தில் வர இயலாத விண்ணப்பதாரர்கள், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட உதவி மையத்துக்கு கடைசி நாளுக்கு முன் எப்போது வேண்டுமானாலும் வந்து சான்றிதழ் சரிப்பார்ப்பில் பங்கேற்கலாம்.

விண்ணப்பதாரர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்புக்கு ஒரு முறை மட்டுமே அனுமதிக்கப்படுவர்கள். எனவே, விண்ணப்பப் படிவத்தின் மூன்றாம் பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து அசல் சான்றிதழ்களையும், அவற்றில் நகல்களுடன் வரவேண்டும். அதோடு, விண்ணப்பப் படிவத்தை பதிவிறக்கம் செய்து, அதில் மார்பளவு புகைப்படத்தையும் ஒட்டி எடுத்த வரவேண்டும்.

மேலும், சந்தேகங்களுக்கு 044 - 2235 9901, 2235 9920 ஆகிய தொலைபேசி எண்களில், தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை செயலர் அலுவலகத்தைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment