Tuesday, April 30, 2019

முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வு: அண்ணா பல்கலை. முடிவு


அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் எம்பிஏ, எம்சிஏ, எம்.இ. உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கு தனி நுழைவுத் தேர்வை நடத்த அந்தப்பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. நிகழாண்டு முதல் அந்த புதிய நடைமுறை அமலுக்கு வரும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எம்பிஏ, எம்சிஏ, எம்.டெக், எம்.இ., எம்.ஆர்க்., எம்.பிளான் போன்ற முதுநிலை படிப்புகளில் சேர இதுவரை டான்செட் எனப்படும் பொது நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டு வந்தது. அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் மாநில அளவில் கலந்தாய்வு நடைபெறும். அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் அனைத்து பொறியியல் கல்லூரிகளிலும், இந்த நடைமுறையே பின்பற்றப்பட்டு வந்தது.வழக்கம்போலவே நிகழாண்டும், டான்செட் தேர்வுக்கான அறிவிப்புகள் வெளியாகக் கூடும் என எதிர்பார்த்து வந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகம் கொள்கை முடிவு ஒன்றை எடுத்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகின. அதன்படி அண்ணா பல்கலைக்கழகத்தில் பயிற்றுவிக்கப்படும் முதுநிலைப் படிப்புகள் அனைத்துக்கும் டான்செட் தேர்வுக்கு பதிலாக தனி நுழைவுத் தேர்வு நடத்துவது என திட்டமிடப்பட்டுள்ளது. அதேவேளையில், மற்ற பொறியியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு எத்தகைய நடைமுறை பின்பற்றப்படும் என்பது இதுவரை தெளிவாகத் தெரியவில்லை.

இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:
அண்ணா பல்கலைக்கழகம் தனி அதிகாரம் பெற்ற கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. அதன் அடிப்படையில் சில முக்கிய முடிவுகளை எங்களால் எடுக்க இயலும். பல்கலைக்கழக முதுநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையை மே மாதத்துக்குள் நிறைவு செய்ய வேண்டும் என்பது பெரும்பாலான பேராசிரியர்களின் கருத்து. அப்போதுதான் தகுதியான மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகத்தில் சேர்க்க முடியும். இல்லையெனில், அவர்கள் வேறு கல்வி நிறுவனங்களைத் தெரிவு செய்ய வாய்ப்புள்ளது. அதைக் கருத்தில்கொண்டே தனி நுழைவுத் தேர்வு முடிவை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர்.

பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு

வேலைவாய்ப்பு பதிவுக்கு ஏற்பாடு க்கான பட முடிவு

கடந்த ஆண்டுகளைப் போன்று நிகழாண்டும் பிளஸ் 2, பத்தாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு அவர்கள் படித்த பள்ளியிலேயே ஆன்லைன் மூலம் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்படவுள்ளது.
இது தொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநர் வி.சி.ராமேஸ்வரமுருகன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு திங்கள்கிழமை அனுப்பியுள்ள சுற்றறிக்கை: தமிழக பள்ளிகளில் கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவ, மாணவிகள் தங்கள் கல்வித் தகுதிகளை தாங்கள் பயின்ற பள்ளிகளின் மூலமாக நேரடியாக வேலைவாய்ப்புத் துறையின் இணையதளத்தில் பதிவு செய்து, அடையாள அட்டை பெற ஏற்பாடு செய்யப்பட்டது. அதுபோன்று 2017-ஆம் ஆண்டுவரை மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு கல்வித் தகுதிகளை அவர்கள் பயின்ற பள்ளிகளிலேயே வேலைவாய்ப்புக்கு பதிவுகள் செய்யப்பட்டன. இதனால் பதிவுதாரர்கள் இந்தச் சேவையைப் பயன்படுத்தி தாங்கள் கல்வி பயின்ற பள்ளிகள் மூலமாகவே பதிவு செய்து கொண்ட காரணத்தால் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் ஏற்படும் கூட்ட நெரிசல் தவிர்க்கப்பட்டது.  

எனவே கடந்த ஆண்டுகளைப் போன்று இந்த ஆண்டும் அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு மேற்கொள்ளப்படுகிறது. பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான பின்னர் நிரந்தர சான்றிதழ் வழங்கும் நாளிலிருந்து 15 நாள்களுக்கு அந்தந்தப் பள்ளிகளிலேயே பதிவு செய்து கொள்ளவும், அந்தந்த தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வெளியிடப்பட்ட நாளே பதிவு மூப்பு நாளாக வழங்கப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கடந்த ஆண்டு (2018) வழங்கிய அதே படிவங்கள் பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்படும். இது தொடர்பாக தலைமை ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.