Thursday, April 18, 2019

தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வு: தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

தொடர்புடைய படம்

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுகளுக்கு தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத்தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக தேர்வுத்துறைத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி: தமிழகத்தில் தொடக்கக் கல்வி பட்டயத்தேர்வுகள் வரும் ஜுன் 14-ஆம் தேதி முதல் ஜுன் 29-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் www.dge.tn.gov.in என்ற இணையதளம் மூலமாக விண்ணப்பத்தையும், பக்கம் 1 முதல் 3 வரையுள்ள அறிவுரைகளையும் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இதையடுத்து தேர்வரின் தகுதி மற்றும் அறிவுரைகளையும் பின்பற்றி பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன் ஏற்கெனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் கண்டிப்பாக இணைத்து ஏப்.23 முதல் ஏப்.30 வரையிலான நாள்களில் தேர்வர் வசிக்கும் மாவட்டத்துக்கு அருகில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம். 

மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் பொருத்தப்பட்டுள்ள வெப் கேமரா' மூலமாக புகைப்படம் எடுக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களிலேயே புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்து கொண்ட பின்னர் அங்கேயே தேர்வுக் கட்டணம் செலுத்த தேர்வரே நேரில் சென்று அணுக வேண்டும். தகுதியற்ற தேர்வர்களின் விண்ணப்பங்கள் எவ்வித முன்னறிவிப்புமின்றி ரத்து செய்யப்படும். தபால் வழி பெறப்படும் விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். 

தேர்வுக் கட்டணம் விவரம்: ஒவ்வொரு பாடத்துக்கும் ரூ.50, மதிப்பெண் சான்றிதழ் (முதலாமாண்டு)- ரூ.100, மதிப்பெண் சான்றிதழ் (இரண்டாமாண்டு) ரூ.100, பதிவு மற்றும் சேவைக் கட்டணம்- ரூ.15, ஆன்லைன் பதிவுக் கட்டணம் (ஒரு விண்ணப்பத்துக்கு)- ரூ.50 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

ஏப்.23-இல் மதிப்பெண் சான்றிதழ்... தமிழகத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு ஆசிரியர் பயிற்சி நிறுவனம் மூலம் பயிற்சி பெற்று முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு தேர்வெழுதிய ஆசிரியர் பயிற்சி மாணவ, மாணவிகள் அவரவர் பயின்ற ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பித்த மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்கள் மூலமாகவும் ஏப். 23 செவ்வாய்க்கிழமை முதல் மதிப்பெண் சான்றிதழ்களைப்பெற்றுக் கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment