பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்க்கைக்கு ஆன்லைனில் கலந்தாய்வு நடத்தப்படுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் சரமாரிக் கேள்விகளை எழுப்பியுள்ளது.
பொறியியல் கலந்தாய்வுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் மற்றும் கலந்தாய்வு நடைபெறுவதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணத்தை எப்படி செலுத்த முடியும்? வங்கிக் கணக்கு இல்லாதவர்கள் பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்க வேறு வழி இருக்கிறதா? என்று நீதிபதி கேள்வி எழுப்பினார்.
மேலும், விண்ணப்பக் கட்டணத்தை ரொக்கம் அல்லது டிடி அல்லது பே ஆர்டர் மூலம் செலுத்த இயலுமா என்பது குறித்தும், பழைய விண்ணப்ப முறையில் இந்த முறையும் விண்ணப்பிக்க முடியுமா என்பது குறித்தும் நாளை அண்ணா பல்கலைக்கழகம் பதில் தரவும் உத்தரவிட்டுள்ளது.
அதோடு, ஆன்லைன் விண்ணப்பப் படிவம் ஆங்கிலத்தில் இருப்பது குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி, ஆங்கிலம் தெரியாதவர்கள் பி.இ.க்கு விண்ணப்பிக்க முடியாதா? என்று கேட்டனர்.
3 ஆண்டுகளாக ஆங்கிலத்தில் மட்டுமே விண்ணப்பிக்கும் முறை நடைமுறையில் உள்ளது என்று அண்ணா பல்கலைக்கழகம் தரப்பில் பதில் அளிக்கப்பட்டது. மேலும், ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியாதவர்கள், தமிழக அரசின் உதவி மையங்களில் விண்ணப்பிக்கலாம். பொறியியல் கலந்தாய்வுக்காக மாணவர்களும், பெற்றோரும் சென்னை வர வேண்டிய அவசியம் இருக்காது என்றும் கூறப்பட்டது.
கல்லூரியை மாற்றுவது குறித்து சென்னை உயர் நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்கு, ஆன்லைன் கலந்தாய்வில் பொறியியல் கல்லூரியை தேர்வு செய்த மாணவ, மாணவிகள் அதனை 3 நாட்களில் மாற்றிக் கொள்ளவும் வசதி செய்யப்பட்டுள்ளது என்று அண்ணா பல்கலை பதில் அளித்தது.
தேர்வு செய்த பொறியியல் கல்லூரியை மாற்ற முதலில் 3 நிமிடம் மட்டுமே அவகாசம் இருந்த நிலையில் தற்போது 3 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment