Thursday, May 17, 2018

மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

Image result for மீன்வளப் பல்கலைக்கழக

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழக மாணவர் சேர்க்கைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என மீன்வளப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் சுக. பெலிக்ஸ் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு : 

நாகப்பட்டினம், தமிழ்நாடு டாக்டர் ஜெ. ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தில், 4 ஆண்டு கால புரபெஷனல் பட்டப் படிப்புகளாக இளநிலை மீன்வள அறிவியல் (பி.எப்.எஸ்.சி.), இளநிலை மீன்வளப் பொறியியல் (பி.இ.) மற்றும் பி.டெக். (உயிர் தொழில்நுட்பவியல் ஆகிய பட்டப் படிப்புகள் பயிற்றுவிக்கப்படுகின்றன.

இதில், பி.எப்.எஸ்.சி. பட்டப் படிப்புக்கு 150 இடங்களும், பி.இ. பட்டப் படிப்புக்கு 30 இடங்களும், பி.டெக். பட்டப் படிப்புக்கு 40 இடங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 7 இடங்களும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு ஒரு இடமும் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளன.

இப்பல்கலைக்கழக இளநிலை பட்டப் படிப்புகளுக்கு மே 17 -ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் மே 17 -ஆம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூன் 16 -ஆம் தேதிக்குள் www.tnfu.ac.in என்ற இணையதளத்தில் பதிவேற்றும் செய்ய வேண்டும். 

மீனவர்களின் குழந்தைகள் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கான சிறப்புப் பிரிவின் கீழ் விண்ணப்பிக்கும் மாணவர்கள் மட்டும் இணையதளம் மூலம் பதிவேற்றம் செய்த விண்ணப்பத்துடன், தேவையான சான்றிதழ்களை இணைத்து 

Chairman, UG Admission Commission, 
Tamilnadu Dr. J.Jayalalitha Fisheris University, 
First Line Beach Road, 
Nagapattinam - 611 001 என்ற முகவரிக்கு அஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மற்ற பிரிவுகளைச் சார்ந்த மாணவர்கள் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றினால் மட்டும் போதுமானது. கலந்தாய்வுக்கு அழைக்கப்படும்போது மாணவர்கள் விண்ணப்பங்கள் மற்றும் தேவையான சான்றிதழ்களைக் கொண்டு வர வேண்டும்.

ஜூன் 30-இல் தரவரிசைப் பட்டியல்... 

கட்-ஆப் மதிப்பெண்கள் அடிப்படையில், தரவரிசைப் பட்டியல் ஜூன் 30 -ஆம் தேதி வெளியிடப்படும். ஜூலை இரண்டு அல்லது மூன்றாம் வாரத்தில் நேரடி கலந்தாய்வு நடத்தப்படும். கலந்தாய்வு தேதி மற்றும் இடம் ஆகியவை இணையதளத்தில் பின்னர் அறிவிக்கப்படும். இதுகுறித்த மேலும் விவரங்களுக்கு 04365- 240558 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புகொள்ளலாம்.

மீனவர்களின் குழந்தைகளுக்கு...

மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவு கடந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இப்பிரிவின் கீழ் மீன்வள அறிவியல் பட்டப் படிப்புக்கு 7 இடங்களும், மீன்வளப் பொறியியல் பட்டப் படிப்புக்கு ஒரு இடமும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

மீனவர்களின் குழந்தைகளுக்கான சிறப்புப் பிரிவில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதிக் கட்டணம், உணவுக் கட்டணம் ஆகியவை இலவசமாக வழங்கப்படும். இந்த கட்டணங்களை தமிழ்நாடு மீனவர் நலவாரியம் ஏற்கிறது. எனவே, மீனவ சமுதாயத்தைச் சேர்ந்த குழந்தைகள் இந்த வாய்ப்பை உரிய வகையில் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றார்.

No comments:

Post a Comment