Sunday, July 1, 2018

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: இன்று கலந்தாய்வு தொடக்கம்: அட்டவணை வெளியீடு

Image result for எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்.: இன்று கலந்தாய்வு

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., படிப்புகளுக்கான கலந்தாய்வு ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 1) தொடங்க உள்ளது. அதற்கான அட்டவணை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

அரசு மருத்துவக் கல்லூரியில் உள்ள எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., இடங்கள், தனியார் மருத்துவக் கல்லூரியில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஜூலை 1 முதல் 7-ஆம் தேதி வரை சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் முதல்கட்ட கலந்தாய்வு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் ஜூன் 28-ஆம் தேதி வெளியிடப்பட்டது. நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் வெளியிடப்பட்ட தரவரிசைப் பட்டியலின் அடிப்படையில் கலந்தாய்வு நடைபெற உள்ளது.

சிறப்புப் பிரிவினர்: 

முதல்நாளான ஞாயிற்றுக்கிழமை மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் ஆகிய சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது. காலை 9 மணிக்கு கலந்தாய்வு தொடங்க உள்ளது. அரசு மருத்துவக் கல்லூரியில் விளையாட்டு வீரர்களுக்கு 7 எம்.பி.பி.எஸ். மற்றும் 1 பி.டி.எஸ்., இடங்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இடங்கள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு 10 எம்.பி.பி.எஸ்., மற்றும் ஒரு பி.டி.எஸ்., இடங்களும் உள்ளன. கலந்தாய்வுக்குத் தகுதி பெற்றுள்ள 44 விளையாட்டு வீரர்களின் பட்டியல், மாற்றுத்திறனாளிகள் ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பித்துள்ள 21 பேரின் பட்டியல் மற்றும் கலந்தாய்வு அட்டவணை ஆகியன www.tnmedicalselection.org, www.tnhealth.org ஆகிய இணையதங்களில் சனிக்கிழமை வெளியிடப்பட்டன. பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு திங்கள்கிழமை (ஜூலை 2) காலை 9 மணி முதல் தொடங்க உள்ளது. தொடர்ந்து ஜூலை 7-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். 

அழைப்புக் கடிதம்: 

மாணவர்கள் தங்களுக்கான அழைப்புக் கடிதத்தை இரண்டு இணையதளங்களில் இருந்தும் பதிவிறக்கம் செய்து கொள்லலாம். மாணவர்களுக்கு தனித்தனியே அழைப்புக் கடிதம் அனுப்பப்படாது. அழைப்புக் கடிதத்தைப் பதிவிறக்கம் செய்ய இயலாதவர்கள் கலந்தாய்வு அட்டவணையில் தங்களின் தரவரிசையின் அடிப்படையில் கலந்து கொள்ளலாம்.

அசல் ஆவணங்கள்:

கலந்தாய்வில் பங்கேற்க வருவோர் "Secretary, Selection committee, Chennai - 10' என்ற பெயரில் ரூ.500-க்கு வரைவோலை எடுத்து வர வேண்டும். மேலும் நீட் தேர்வுக்கூட நுழைவுச் சீட்டு, நீட் தேர்வு மதிப்பெண் அட்டை, பத்தாம் வகுப்பு மதிப்பெண் பட்டியல், பிளஸ் 2 மதிப்பெண் பட்டியல், பள்ளியில் இருந்து  பெறப்பட்ட ஆளறிச் சான்றிதழ், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அல்லது தற்போது படித்து வரும் கல்வி நிறுவனத்தில் இருந்து பெறப்பட்ட ஆளறிச் சான்றிதழ், ஆதார் அட்டை, ஜாதிச் சான்றிதழ், குடும்ப அட்டை அல்லது கடவுச்சீட்டு, முதல் தலைமுறை பட்டதாரி சான்றிதழ் (பொருந்துவோருக்கு), தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் பிற மாநிலங்களில் 6 முதல் பிளஸ் 2 வரை படித்திருந்தால் அந்த மாணவர்கள் இருப்பிடச் சான்றிதழ் ஆகியவற்றின் அசல் சான்றிதழைக் கலந்தாய்வில் சமர்ப்பிக்க வேண்டும். ஆவணங்கள் இல்லாத மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க இயலாது.

பெற்றோர் ஆவணங்கள்: 

தமிழகத்தைச் சேர்ந்த ஆனால் பிற மாநிலங்களில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படித்த மாணவர்களின் பெற்றோரும் தங்களது ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், பத்தாம் வகுப்பு அல்லது பிளஸ் 2 அல்லது ஏதாவது பட்டயம் அல்லது பட்டம் பெற்ற சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, இருப்பிடச் சான்றிதழ் (பொருந்துவோருக்கு) ஆகியவற்றில் தங்களிடம் இருக்கும் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.

கல்விக் கட்டணம்: 

கலந்தாய்வில் பங்கேற்று அரசு மருத்துவக் கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் இடங்களைப் பெறும் மாணவர்கள் தகவல் குறிப்பேட்டில் தெரிவிக்கப்பட்ட கல்விக் கட்டணத்தைச் செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெறும் மாணவர்கள் கல்விக் கட்டணமாக ரூ.25 ஆயிரம் செலுத்த வேண்டும். தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களைப் பெற்று கல்விக் கட்டணத்தைச் செலுத்திய பிறகு, கல்லூரியில் சேராவிட்டால் ரூ.25 ஆயிரம் திருப்பி அளிக்கப்படாது. கல்விக் கட்டணத்துக்கான வரைவோலையை எடுப்பதற்கு கலந்தாய்வு நடைபெறும் அரங்கிலேயே வங்கிக் கவுன்ட்டர் செயல்படும். 

கலந்தாய்வு அறைக்குள் செல்லிடப்பேசி உள்ளிட்ட மின்னணு சாதனங்களுக்கு அனுமதி கிடையாது. மாணவர்கள் தங்களுடன் தாய் அல்லது தந்தை என ஒருவரை மட்டுமே கலந்தாய்வு அறைக்குள் அழைத்துச் செல்லலாம். முதல்கட்ட கலந்தாய்வில் பங்கேற்காத மாணவர்கள் அடுத்த கட்ட கலந்தாய்வுகளில் பங்கேற்க அனுமதிப்பட மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment